Cinema

ராஜூ முருகனின் ’ஜிப்ஸி’ படத்துக்கு சென்சார் சிக்கல் ? : வன்மத்தை விதைக்கும் எஸ்.வி சேகர் ட்வீட்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

தனது முந்தைய படமான ‘ஜோக்கர்’ படத்திலேயே மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் ராஜூமுருகன். ஆனால், அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

‘ஜிப்ஸி’ திரைப்படத்திலும் ராஜூமுருகன், மதவெறிக்கு எதிராக சில காட்சிகளை வைத்திருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அப்படத்தின் ட்ரெய்லரிலேயே மதவெறி குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

‘ஜிப்ஸி’ ட்ரெய்லர் வெளிவந்தபோதே பா.ஜ.க-வினர் பலர் கொந்தளித்தனர். இந்நிலையில், ‘ஜிப்ஸி’ திரைப்படம் சென்சார் ஆணையத்தில் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஜிப்சி திரைப்படத்தில் என்ன பிரச்னை? இரு முறை EC&RC சென்சார் மறுக்கப்பட்டு தீர்ப்பாயம் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்வர் யோகி அவர்கள் கெட்-அப் போட்டு அவர் பெயரையே பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.கவா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதவெறியைச் சாடியதைப் பொறுக்கமாட்டாமல், திரைப்படத்தின் மீது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.வி.சேகர். அதோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு தி.மு.க-வையும் இதற்குள் இழுத்து, சர்ச்சையை உண்டாக்க முயற்சித்திருப்பது தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.