Cinema

விஷால் பெயரைச் சொல்லி ரூ.47 லட்சம் மோசடி : சன்னி லியோன் பட இயக்குநருக்கு போலிஸ் வலைவீச்சு!

தம்பி வெட்டோத்தி சுந்தரம், செளகார்பேட்டை, பொட்டு போன்ற படங்களை இயக்கியவர் வடிவுடையான். இவர் கடந்த 2016ம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நரேஷ் கோத்தாரி என்ற தயாரிப்பாளரிடம் ரூ.7 கோடி பட்ஜெட்டில் நடிகர் விஷாலை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கால்ஷீட்டை அவரிடம் பெற்றதற்கான ஆவணத்தையும் காட்டியுள்ளார்.

இதனையடுத்து, எவ்வித யோசனையும் இன்றி வடிவுடையானிடம் ரூ.47 லட்சத்தை 3 தவணைகளாக நரேஷ் கோத்தாரி கொடுத்துள்ளார். ஆனால், படம் எடுப்பதற்கான எவ்வித முன்னெடுப்பும் எடுக்கவில்லை. கொடுத்த பணம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லாததால் சந்தேகமடைந்த நரேஷ் கோத்தாரி, விஷால் தரப்பில் படப்பிடிப்பு குறித்துக் கேட்டுள்ளார். அவர்கள் சொன்ன தகவல் அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதாவது, வடிவுடையானுக்கு விஷால் கால்ஷீட் ஏதும் கொடுக்கவில்லை என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தன்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நரேஷ் கோத்தாரி. இதனடிப்படையில் வடிவுடையானை தேடும் பணியை போலிஸார் தீவிரபடுத்தியுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட வடிவுடையான், பாலிவுட் நடிகை சன்னி லியோனை வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘வீரமாதேவி’ என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.