Cinema

‘மாநாடு’ போனால்.. ‘மகா மாநாடு’ வரும் : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிம்பு ! - ‘வேட்டை மன்னன்’ நிலையாகுமோ ?

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் படம் கைவிடப்பட்டதால் நடிகர் சிம்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்மையில் தெரிவித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்திலேயே விரைவில் புதிய படக்குழுவுடன் மாநாடு படம் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாநாடு படம் தொடர்பாக பல்வேறு கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வரும் நிலையில் நடிகர் சிம்பு ‘மகா மாநாடு’ என்கிற பெயரில் புதிய படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பிலேயே இயக்கி, நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, தயாரிப்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காதது என பலவகையில் சர்ச்சைக்குள்ளாகும் நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்திற்குப் போட்டியாக ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க இருப்பதாக வெளியான செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மன்மதன், வல்லவன் ஆகிய படங்களை சிம்புவே இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக சிம்புவுக்கு இறங்கு முகமாக இருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கும் நிலையில், பல வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘வேட்டை’ படத்தில் இருந்து சிம்பு சில காரணங்கள் சொல்லி விலகினார். அதன்பின்பு ‘வேட்டை மன்னன்’ என்கிற திரைப்பட அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், அந்த திரைப்படமும் சில வருடங்களுக்குப் பிறகு, ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சிம்பு ரசிகர்கள் ‘மகா நாடு’ என்ன நிலை ஆகுமோ என ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனர்.