Cinema

சிம்புவுடன் நட்பு தொடரும் ஆனால், அவரை வைத்து படம் தயாரிக்க முடியாது : ’மாநாடு’ தயாரிப்பாளர் கவலை

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. இப்படம் நீண்ட நாட்களாக முதற்கட்டப் பணிகளிலேயே இருந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், சிம்பு பல்வேறு கண்டிஷன்கள் போட்டதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தைக் கைவிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.