Cinema

சினி அப்டேட்ஸ் 5 : ரசிகர்களை ஏமாற்றிய ‘கோமாளி’ டைரக்டர்... ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் ஜோடி யார்?

1. பொன்ராம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பொன்ராமுக்கு இறுதியாக வெளியான படம் சீமராஜா. இந்தப் படம் வெளியான கையோடு, விஜய்சேதுபதிக்கு ஒரு கதை சொல்லியிருந்தார் பொன்ராம். அந்தக் கதை சேதுபதிக்குப் பிடித்துப் போக, பட வேலைகள் துவங்கியது. ஆனால் விஜய்சேதுபதி கால்ஷீட் பிரச்னையால் தள்ளிப்போகிறது. இடையே, இன்னொரு படத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார் பொன்ராம்.

சசிகுமார் நாயகனாக நடிக்க இருக்கும் அந்தப் படத்தின் வேலைகள் தற்போது நடந்துவருகிறது. சசிகுமாரோடு சமுத்திரகனி, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

2. டிஜிட்டல் தளத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

மார்வெல் நிறுவனத்தின் 10 ஆண்டுகால உழைப்பின் வெற்றியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் அவதார் படத்தைப் பின்னுக்குத் தள்ளி தற்போது முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள், அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், டிஜிட்டல் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இன்னும் திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்க, இணையதளத்திலும் வெளியாகியிருப்பது,
ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

3. ரசிகர்களை ஏமாற்றிய ஜெயம் ரவி பட இயக்குனர்

தனது முதல் படத்திலிருந்தே, ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் ஒரு நடிகர் ஜெயம் ரவி. ஆரம்பத்திலிருந்தே இளைஞர்களை டார்கெட் செய்யும் படங்களாகவே நடித்து வந்த இவர் தற்போது கோலிவுட்டின் முக்கிய நடிகராக வளர்ந்து நிற்கிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் வெளியான ‘அடங்கமறு’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘கோமாளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. கோமாளி படத்தில் இவர் மொத்தம் ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பதாக சொல்லி அதற்கான போஸ்டர்களையும் வெளியிட்டிருந்த இந்த படக்குழு, தற்போது ரவி இதில் மொத்தம் 4 கெட்டப்புகளில் மட்டுமே நடித்துள்ளார். இது மனிதனின் பரிணாம வளர்ச்சியை பற்றி பேசும் படம் என்பதால் ஆதாம், கற்கால மனிதன் போன்றவை பட ப்ரோமோஷனுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், படத்தில் இடம் பெறாத காஜல் அகர்வாலின் கெட்டப் போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என பதிவிட்டுள்ளனர். ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா என பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 15ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

4. ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் தடம் பட நடிகை

‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ போன்ற படங்களின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை தன்யா இதற்குமுன் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. கலைஞர் டிவி தொகுப்பாளர் நடிக்கும் ‘தொடுப்பி’ டீஸர்!

நமது கலைஞர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி பல பிரபலங்களை பேட்டி எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தணிகை. இவர் நடிகர் அருண் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்த ‘தடம்’ படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இவருக்கு ஹீரோ வாய்ப்பும் கிடைத்தது. தேஸ்வின் ப்ரேம் எனும் அறிமுக இயக்குனரின் ‘தொடுப்பி’ படத்தில் தணிகை ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானதை தொடர்ந்து, தற்போது டீஸரும் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘சோல் ஆஃப் சவுத்’ எனும் இசைக்குழு இசையமைத்துள்ளது. தணிகைக்கு ஜோடியாக இதில் ரேஷ்மிகா, அதுல்யா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இளைஞர்களை அதிகமாக கவரும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கும் என்பதை டீஸர் உறுதிப்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கான ஷூட்டிங் நாகர்கோவில், கன்னியாகுமரி, கொச்சி ஆகிய இடங்களில 60 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் டீஸர் வெளியானதை தொடர்ந்து விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறதாம். நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி தொடுப்பி  படத்தின் டீசரை வெளியிட்டார்.