Cinema

திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.. எல்லோருமே எனக்கு நண்பர்கள் : ஓவியா ஓபன் டாக் !

2010ம் ஆண்டு நகைச்சுவை கலந்த காதல் படமாக வெளியானது ‘களவாணி’. சற்குணம் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2 கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. முதல் பாகத்தில் காதலர்களாக இருந்த விமலும் ஓவியாவும் இரண்டாம் பாகத்தில் தம்பதியாகவும், விமல் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை ஓவியா, களவாணி படம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஹெலன் என்ற பெயரில் இருந்த என்னை ஓவியாவாக மாற்றியவர் இயக்குநர் சற்குணம் தான் என தெரிவித்தார்.

அதேபோல், எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் நடிகர் விமல். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும் கூட என ஓவியா பேசினார்.

இதனையடுத்து, ஓவியாவிடம் அவரது திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எனக்கு நம்பர் ஒன் நடிகை, பெரிய பங்களா வீடு போன்ற கனவெல்லாம் இல்லை. இன்னும் நான் சம்பாதிக்கவே தொடங்கவில்லை. கடைசி வரை நடித்துக்கொண்டிருந்தால் போதும் என்றார்.

திருமணத்தில் எனக்கு உடன்பாடு எதுவும் இல்லை. ஆகையால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என ஓவியா பதிலளித்தார். மேலும், எனக்கு எதிரி, நண்பர் என யாரும் கிடையாது. எல்லாரிடமும் ஒன்று போலவே பழகுவேன் என்று தனக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார்.