இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் செல்லும் TK003 எண் கொண்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பயணிகள் பலரும் பயணம் செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 11 வயது சிறுமி ஒருவரும் தனது குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார். விமானத்தில் ஏறி சில நேரம் கழித்து சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் சிறுமிக்கு முதலுதவி அளித்துள்ளனர். இருப்பினும் நேரமாக ஆக சிறுமியின் நிலைமை மோசமடைந்ததால், வேறு வழியின்றி விமானத்தை தரையிறங்க அறிவுறுத்தினர். அதன்படி விமானம் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் என்ற இடத்தில அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த மருத்துவக் குழு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து சிறுமி வந்ததும், அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தனர். தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்தபோதிலும், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த நிகழ்வால் விமானம் சுமார் நான்கரை மணி நேர தாமதமாக நியூயார்க்கிற்கு புறப்பட்டது. பறக்கும் விமானத்தில் மயங்கிய சிறுமி உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.