ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 18 வயதான செஸ் விளையாட்டு வீரர் ஆதித்யா வர்மா.இவர் சமீபத்தில் ஒரு விமானம் ஒன்றில் பயணம் செய்யும்போது, தன்னுடைய நண்பர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் "நான் தாலிபான் அமைப்பை சேர்ந்தவன், நான் இப்போது செல்லும் விமானத்தை தற்போது வெடிக்க வைக்க போகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள் இதுகுறித்து போலிஸாரிடம் கூறியுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த போலிஸார் உடனடியாக, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விமான நிலைய பெயர் பட்டியலை பார்த்தபோது அதில் ஆதித்யா வர்மாவின் பெயர் இருந்துள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உடனே விரைவாக செயல்பட்ட ராணுவம், இரண்டு போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள் ஆதித்யா வர்மா சென்றுகொண்டிருந்த விமானத்தை தரையிறங்க கூறியுள்ளனர். ராணுவத்தால் அனுப்பப்பட்ட போர் விமானங்களும் இந்த விமானத்தை பத்திரமாக தரைஇறங்க வைத்துள்ளன.
பின்னர் விமானத்தில் நுழைந்த அதிகாரிகள், ஆதித்யா வர்மாவிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, "என்னை மன்னித்துவிடுங்கள் நான் நண்பர்களிடம் விளையாடுவதற்காக இந்த குறுஞ்செய்தியை அனுப்பினேன்" என்று கூறியுள்ளார்.
எனினும் அவரை பிடித்த விமான நிலைய அதிகாரிகள், அவரை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது ஆதித்யா வர்மா சிறையில் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.