உத்தரகாண்டின் ரிஷிகேஷ் பகுதியில் AIIMS மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் தங்கள் நோய் சரியாக வேண்டும் என்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் போலீசார் வாகனத்துடன் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் ரிஷிகேஷ் AIIMS மருத்துவமனையில் சதீஷ் குமார் என்ற மருத்துவர் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவர் அங்கே பணிபுரியும் சக பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த மே 19-ம் தேதி அந்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி சதீஷ் குமார் தொல்லைக் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தை கண்டித்து, அந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் சதீஷ் குமாரை முற்றுகையிட்டு கோஷமும் எழுப்பினர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் மருத்துவரை கைது செய்ய மருத்துவமனைக்கு வந்த போலீசார், வாகனத்தை வெளியே நிறுத்தாமல், வளாகத்திற்குள் வாகனத்துடன் நுழைந்தனர். அதுவும் 4-வது தளத்தில் தனது ஜீப்பில் போலீசார் வந்தனர். போலீசார் வாகனம் வருவதால், பொது வார்டில் இருந்த நோயாளிகளின் படுக்கைகளை, அப்புறப்படுத்தப்பட்டது.
போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நோயாளிகள் தங்கள் நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குள் போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு கண்டனங்களும் குவிந்து வருகிறது.