உலகமே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கித் தவித்து வந்தது. தற்போதுதான் உலகம் பழையபடி தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்தபோது பலரும் பல்வேறுவிதமான மனச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் ஊழியர் ஒருவருக்கு ஊதியத்துடன் ஒருவருடம் விடுமுறை என்ற பரிசு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்ஜென் நகரில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்காக லக்கி டிரா என்ற போட்டியை நடத்தியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஒருநாள் இரண்டு நாள் ஊதியத்துடன் விடுமுறை என்றும், தோற்றால் உணவு விநியோகம் செய்யும் வெயிட்டர் வேலை செய்ய வேண்டும் என்ற விதியும் இருந்துள்ளது.
இந்த விதி முதலில் அனைவரையும் கொஞ்சம் அச்சப்பட வைத்தாலும் பிறகு பலரும் போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் லக்கி டிரா போட்டியில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவருக்கு ஊதியத்துடன் ஒரு வருடம் விடுமுறை என்ற பரிசு கிடைத்துள்ளது.
தற்போது இந்த செய்திதான் சீனாவில் வைரலாக இருக்கிறது. மேலும் இந்த பரிசு உண்மைதானா என்பதையும் வெற்றி பெற்ற நபர் தனது நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெற்றி பெற்றவரிடம் நீங்கள் பரிசுக்குப் பணம் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது சம்பளத்துடன் கூடியே விடுமுறையை அனுபவிக்கப் போகிறீர்களா? என பரிசு பெற்றவரிடம் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் பல்வேறு விதமாக தங்களது கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஒருவர், விடுமுறை முடிந்து அந்த ஊழியர் அலுவலகத்திற்கு வரும் போது அவரது இடத்தில் வேறொருவர் வேலை செய்து கொண்டிருப்பாரா? என்றும் மற்றொருவர் உங்கள் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் இந்த செய்திதான் வைரலாகி இருக்கிறது.