
சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா (வயது 17), பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப்போட்டியில் ஈரானை 75-21 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் பெற்று சாதனை படைத்தது.
இதில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்து உலக அரங்கில் இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்த சென்னையின் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ஆவார். இவரின் அபார ஆட்டத்தால் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.

கார்த்திகாவின் தாயார் சரண்யா சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் 29.10.2020 முதல் 01.01.2024 வரை தூய்மைப் பணியில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சொந்தமாக ஆட்டோ வாங்கி தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார்த்திகாவின் வெற்றியை பாராட்டி அவரை ஊக்குவிக்கும் விதமாக, ரூ.25 இலட்சம் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து கார்த்திகாவின் வெற்றியைப் பாராட்டி அவரைச் சிறப்பிக்கும் விதமாகவும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கார்த்திகாவுக்கு ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையினை வழங்கி, பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.






