பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில் (Asian Youth Games 2025), கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆடவர் இறுதிச்சுற்றில் 35-32 என ஈரானை வீழ்த்திய இந்தியா, மகளிர் இறுதிச்சுற்றிலும் 75-21 என அதே அணியை அபாரவெற்றி கண்டது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான அபினேஷ் மோகன்தாஸ் ஆடவர் அணியிலும், வீராங்கனையான கார்த்திகா (கண்ணகி நகர் கார்த்திகா) மகளிர் அணியிலும் இடம்பெற்றிருந்தனர். இந்த சூழலில் கபடி போட்டியில் தங்கம் வென்றுள்ள இந்த இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் பக்ரைனில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பிய கபடி தொடரில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கபடி வீரர்கள் இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், வீரர்கள் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் இருவருக்கும் தலா ரூ.25 லட்சத்திற்கான உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து வீராங்கனை கார்த்திகா அளித்த பேட்டி வருமாறு :-
“இன்று முதலமைச்சரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இது மிகுந்த மேலும் விளையாட்டுத்துறையில் சாதிக்க எங்களை ஊக்குவிக்கும். விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதற்காக பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கி வரும் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மிகுந்த நன்றி” என்றார்.
இதைத்தொடர்ந்து வீரர் அபினேஷ் மோகன்தாஸ் அளித்த பேட்டி வருமாறு :-
“முதலமைச்சரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் நாங்கள் எதிர்காலத்தில் பங்கேற்கும் போட்டிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த விளையாட்டில் வெற்றி பெற எங்களுக்கு உதவிய முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மிகவும் நன்றி” என்றார்.
தொடர்ந்து பேட்டியளித்த கபடி வீரர் அபினேஷ் அவர்களின் தாயார் தனலட்சுமி :-
“அபினேஷ் சிறுவயதில் இருந்து கடின உழைப்பின் காரணமாக இந்த இடத்திற்கு வந்துள்ளான். முதலமைச்சர் இன்று சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துதெரிவித்தது நாட்டில் உள்ள அனைவரையும் ஊக்குவிக்கும்” என்றார்.






