2025-ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் தனி அலுவலர், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 16/10/2025 முதல் 19/10/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிகளுக்காக 21/10/2025 முதல் 23/10/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 என ஆக மொத்தம் 15,129 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.