
திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட கொழுமனிவாக்கம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் அரசு துறையில் சேவைகளை விண்ணப்பித்து பயன்பெற்றனர்.
இதனிடையே செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முன்னர் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை தேடி மக்கள் சென்று வந்தனர். ஆனால் இப்போது, அரசு அலுவலகங்களும் அரசு அதிகாரிகளும் மக்களைத் தேடி வரும் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத மகத்தான இந்த திட்டத்தை தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இந்திய அளவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு முதல் இடத்திலும், ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இது தமிழகத்தின் வெற்றி மட்டுமல்ல, தமிழக மக்களின் வெற்றி. ஓய்வின்றி நிதி மேலாண்மை வகுத்து மக்களுக்கு உழைக்கும் முதலமைச்சரை மனம் இருந்தால் பாராட்டலாம் மனம் இல்லை என்றால் எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.








