காற்று மாசு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை தொடர்பான தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 762 இருசக்கர வாகனங்களும், 7 ஆயிரத்து 770 கார்களும், ஆயிரத்து 14 லாரி உள்ளிட்ட மின்சார வாகனங்களும் விற்பனையாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விற்பனையானதாக கூறப்படும் மின்சார வாகனங்களில், கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன. போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணங்களால், நகரவாசிகள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதை உணர்ந்துள்ள சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை மாநாகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
மின்சார வாகனங்களில் பயணிக்கும் மக்களிடையே, குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே சார்ஜிங் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதனை போக்கும் வகையில் தான், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னையில் முதற்கட்டமாக மின்சார சார்ஜிங் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்,
1) பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்.
2) பெசன்ட்நகர் கடற்கரை பார்க்கிங்.
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்.
4) தி.நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்.
5) தி.நகர், சோமசுந்தரம் மைதானம்.
6) செம்மொழி பூங்கா, ஆயிரம் விளக்கு.
7) மெரினா கடற்கரை பார்க்கிங்
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா.
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா
இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.