நான் முதல்வன் திட்டத்தில் பயின்று அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தானர். இதனைத் தொடர்ந்து இன்று அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த பாராட்டு விழாவில் ங்கேற்பதில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 50 முதல்வர்களை உருவாக்கி இருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2020 - 2021ஆண்டு 20-க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். ஒன்றிய குடிமைப் பணி தேர்விலும் ’தமிழ்நாடு நம்பர்’ என்ற இலட்சியத்தோடு நம்முடைய முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கினார்.
நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவின் கீழ் வழங்கப்படுகின்ற ஊக்கத் தொகை வெறும் நிதி உதவி கிடையாது. ஒன்றிய அரசின் குடிமைப்பணி என்கிற உங்களுடைய கனவின் மீது வைத்திருக்கக் கூடிய முதலீடு. இன்று சிவசந்திரன், மோனிகா ஆகியோர் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளனர்.
இன்று 50 பேர் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்றால் நாளை உங்களை பார்த்து இன்னும் 100,200 பேர் உற்சாகத்துடன் யுபிஎஸ்சி தேர்வை நோக்கி முன் வருவார்கள். உங்களுடைய ஒவ்வொருவரின் பணியும் சிறக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்கு பணியாற்ற சென்றாலும் நீங்கள் பணி செய்கின்ற விதம் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறீர்கள் என்று சொல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.