சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெரிசலை தடுக்க ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி MP கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்து நகர் விரைவு வண்டி ஒரு இரயில் மட்டுமே ஓடுகிறது. அதில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்கும் வணிக தொடர்புகளை கருத்தில்கொண்டும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா விரைவு வண்டி வழித்தடத்தில் புதிய விரைவு வண்டி இரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசாங்கத்திடம் அவர் கேட்டுள்ளார்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் மற்றும் நாகர்கோவில் விரைவு வண்டிகளை இணைக்கும் இணைப்பு பயணிகள் இரயில்களை அரசாங்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்றும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி சென்னை தூத்துக்குடி இடையில் வந்தே பாரத் விரைவு வண்டியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டுள்ளதா எனவும் கேட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் மாநிலங்களுக்கு சலுகைகள்
நாட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க உபரி எரிசக்தியை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு அரசாங்கம் ஊக்கமளித்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தஞ்சாவூர் திமுக மக்களவை உறுப்பினர் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ள புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அமைப்புகளின் திறன் பற்றிய விவரங்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில், திட்ட வாரியாக, பல்வேறு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உபரி உற்பத்தி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் வெளியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.