தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
பா.ஜ.கவின் இந்த அராஜக இந்தி திணிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என தமிழ்நாடே கொதித்தெழுந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் நேற்று இந்தியா கூட்டணி தலைவர்களின் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ”திராவிட_மாடல் அரசு ஒரு போதும் இந்தித்திணிப்பையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்காது” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ”இந்தி தெரியாது போடா” என்ற வாசகத்தை எழுதி பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு முன்பு கோலமிட்டு ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே?, எங்கள் கல்வி, எங்கள் உரிமை, இந்தியை திணிக்காதே என வீட்டிற்கு முன்பு எழுதி கோலமிட்டுள்ளனர். தற்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கோலமிட்டு கண்டனம் தெரிவித்து வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.