அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் இந்த விவகாரத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 26-ம் தேதி பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர் (21), யுவராஜ் (25) ஆகிய 2 இளைஞர்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து, பதாகைகள் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அந்த நேரத்தில் அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, உடனடியாக அவர்கள் கைகளில் இருந்த உருவ பொம்மை மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறை அவர்களை கைது செய்தது.
இது தொடர்பாக சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ அல்லது எரிய கூடிய பொருள்களை எடுத்து வருவது உள்ளிட்ட பிரிவுகளி கீழ் யுவராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி, உருவப்பொம்மை எரிக்க பெட்ரோல் எடுத்து வந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்களை கைது செய்திருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது அவர்கள் அத்துமீறி போராட்டம் நடத்திய ஸ்ரீதர், யுவராஜ் இருவரும், வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை கல்லூரி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி, அது தொடர்பான அனுபவங்களை தங்கள் கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.