சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி செம்பரபாக்கம் எரியில் நீர் இருப்பு 23.29 அடியாகவும், கொள்ளளவு 3453 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாகவும் உள்ளது...
ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 08.00 மணியளவில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது...
மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர். காவனுர் குன்றத்துர். திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகரத்தின் அடையாற்றின் வெள்ளத்தில் பாதிப்பு இல்லாமல் இருக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சைதாப்பேட்டை அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள ஜோதியம்மாள் நகர், சத்யா நகர், திடீர் நகர், பர்மா காலனி, சின்னமலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் இருக்கும் பொது மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் ஓரம் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களை வெளியேற அறிவுறுத்த ஒலி பெருக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் அடி மட்டுமே திறக்கப்பட்டு உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனினும் 10 ஆயிரம் கன அடிக்கு மேலே செம்பரபாக்கம் ஏரியில் திறக்கும் போது தான் ஆற்றில் தண்ணீர் வேகம் இருக்கும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.