அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள அவர் மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை., இதன் மூலம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என குறிப்பிட்டார்.
அதேபோல், அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "செந்தில் பாலாஜி கைதை பொறுத்தவரை சட்ட விதிகளின் படிதான் மேற்கொள்ளபட்டுள்ளது. எந்த விதி மீறலும் இல்லை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை கடந்த 27 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
நீதிபதி நிஷா பானு, "சட்டவிரோத காவலில் இருப்பதாக மேலகாவின் மனு விசாரணக்கு உகந்தது. கைது சட்ட விதிகளின் படி இல்லை. எனவே ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது" என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, நீதிபதி நிஷா பானு தீர்ப்பை தாம் ஏற்கவில்லை. செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தி.மு.க சட்டப் போராட்டத்திற்கு விடையாக இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு கொடுத்துள்ளனர். இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினால் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்படும்.
3வது நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார். 3வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பு இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.காவேரிம மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெறலாம் என தெரிவித்துள்ளார்.