கலா தபஸ்வி என்றழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.
சினிமா மீது இருந்த ஆர்வத்தில் 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1975ம் ஆண்டு ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு படட்தை இயக்கி அதற்கு நந்தி விருதும் பெற்றார்.
அதன்பின்னர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 50 திரைப்படங்களை இயக்கி இயக்கினார். இயக்குநராக இருந்தாலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் பல முன்னணி படங்களில் நடித்த அவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து தனி முத்திரையை பதித்தார். அதன்பின்னர் இந்தியாவின் திரைப்படத் துறைக்கான மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார்.
அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்துவந்த நிலையில் சில மணிநேரங்கள் முன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தாதாசாகெப் பால்கே விருது பெற்றவரும், பிரபல இயக்குனரும், பழம்பெரும் நடிகருமான கே.விஸ்வநாத் (வயது 92) 02.01.2023 அன்று உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
கே.விஸ்வநாத் சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற காலத்தால் அழியாத எண்ணற்ற திரைக்காவியங்களை இயக்கியவர் ஆவார். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.