செல்போனில் பேசாத, பயன்படுத்தாத கால்களுக்கு எல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்திய பிரபல செல்போன் (ஏர்டெல்) நிறுவனத்திற்கு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூரில் Frontline Technologies என்ற பெயரில் இணையம் தொடர்பான தொழில் செய்து வருபவர் அன்புத்தேன் என்னும் முதுகலை கணினியில் பட்டதாரி. இவர் கரூர் நகரில் கோவை சாலையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட ஏஜென்ட் ஆன நிறுவனத்தில் ஏர்டெல் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தார்.
அதற்கான மாதாந்திர பணம் செலுத்த சென்றபோது புதிய பிளான்கள் வந்துள்ளன. அந்த பிளானில் சேர்ந்தால் உங்களுக்கு நல்லது என்று சொல்லி புதிய பிளான்களில் அன்பு தேன் சேரும்படி வலியுறுத்தினர். பின்பு அன்புத்தேன் பேசாத, பயன்படுத்தாத கால்களுக்கு எல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அநியாயமாகவும் முறைகேடாகவும் பணம் செலுத்த சொல்லி ஏர்டெல் நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும், அன்பு தேன் பயன்படுத்தி வந்த ஏர்டெல் சிம் கார்டுகளையும் முடக்கி வைத்து விட்டனர். இதனை எதிர்த்து அன்பு தேன் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ரத்தினசாமி இன்று பிறப்பித்த உத்தரவில், "மேற்கண்ட வழக்கு தொடர்பாக அன்புத்தேன் ஏர்டெல் நிறுவனத்துக்கு செலுத்தி இருந்த கட்டணத் தொகையை வட்டியுடன் திரும்பித் தர வேண்டும் என்றும், மேலும் 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு ஏர்டெல் நிறுவனம் அன்பு தேனுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்கள்
பொதுமக்கள் இதுபோன்ற செல்போன் கம்பெனி நிறுவனங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது ஏமாற்றி வஞ்சகமாக சிக்கலான பிளான்களில் சேர சொல்லி செல்போன் கம்பெனி காரர்கள் மாட்டி விட்டு விடுகிறார்கள் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.