ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கின. மேலும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தைக் கைவிடவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு ஒன்றிய அரசு சொன்ன பதிலால் அதிர்ச்சி அடைந்த மதுரை சிபிஐ(எம்) எம்.பி சு.வெங்கடேசன், “அக்னி பாத்: எதிர்காலம் எப்படி இருக்குமென்பதற்கு நிகழ்காலமே சாட்சியம். எனது கேள்வியும் - அமைச்சர் தந்த அதிர்ச்சி பதிலும்..” என்ற தலைப்பில் இதுதொடர்பாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்.
முன்னாள் இராணுவத்தினருக்கு மறு வேலை வாய்ப்பிற்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அப்பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் எவ்வளவு சதவீதம் உள்ளனர் ? என்பதே என் கேள்வி. ( நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் : 1149 ஜூலை 22, 2022)
அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு இணைய அமைச்சர் அஜய் பட் தந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
முன்னாள் இராணுவத்தினருக்கு
* மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P), மத்திய ஆயுதப் படை (CAPFs), (10 சதவீதம் - குரூப் "சி " - 10 சதவீதம், குரூப் டி - 20 சதவீதம்,
* மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வரையிலான நேரடி நியமனங்களில் 10 சதவீதம்.
* மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம்
* பாதுகாப்பு காவல் கார்ப்ஸ் (DSC) - 100 சதவீதம்
என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.
இதனடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றவர்கள்
2014 - 2322
2015 - 10982
2016 - 9086
2017 - 5638
2018 - 4175
2019 - 2968
2020 -. 2584
2021 - 2983
2015, 2016 இரண்டு ஆண்டுகளில் முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையோடு 2017 - 2021 ஐந்தாண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு இருக்கிறது. 2015 இல் 10000 ஐ தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள் 2019 - 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தலா 3000 ஐ கூட கடக்கவில்லை.
சில நேரம் எண்ணிக்கை கூட சரியான சித்திரத்தை தராது. ஆகவே அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது என்று பார்த்தால் அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளன.
இது 30.06.2021 இல் உள்ள நிலைமை.
முன்னாள் இராணுவத்தினர் சதவீதம் இதுதான்.
1. மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P) குரூப் சி -1.39 சதவீதம், குரூப் டி - 2.77.
2. மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), குரூப் சி - 1.14 சதவீதம், குரூப் டி - 0.37 சதவீதம்
3. பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 9.10, குரூப் - 21.34
4 மத்திய ஆயுதப் படை (CAPFs) குரூப் "ஏ"2.20
குரூப் "பி" 0.87
குரூப் "சி" 0.47
குரூப் "டி" 0.00
அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிக பட்ச சதவீதம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை. ஒரு சதவீதத்திற்கும் கீழே இருக்கிற இடங்கள் உள்ளன. ஜீரோ சதவீதம் கூட உள்ளது.
ஏற்கெனவே உள்ள முன்னாள் இராணுவத்தினர் நிலைமையே இதுதான். மறு வேலை வாய்ப்பு இல்லை. வேலை கிடைத்தால் இருந்திருக்கக் கூடிய இராணுவப் பணியின் கடைசி ஊதியம் புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது என்ற நடைமுறைக்கும் இடம் இல்லை.
20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.