கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஒரு வங்கியின் கிளை உள்ளது. அதன் மேலாளர் வினோத்குமார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஹபீப் ரகுமான் (41). பேன்சி ஸ்டோர் வியாபாரம் செய்து வருகிறார். கிருஷ்ணவேல் ( 36) ஒரு கார் விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் வங்கி மேலாளர் வினோத்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப்புகாரில், ஹபீப் ரகுமான் தங்களது வங்கியில் 4 சக்கர வாகன கடன் ரூ 4 லட்சத்து 47 ஆயிரம் வாங்கி, கிருஷ்ணவேல் உதவியுடன் கார் வாங்கினார்.
கடன்தொகை திரும்ப செலுத்தி வந்தார். கடன்தொகை நிலுவையில் உள்ள நிலையில் ஹபீப் ரகுமானும் கிருஷ்ணவேலும் வங்கி மேலாளரின் கையெழுத்தை போட்டு, அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரின்பேரில் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ஹபீப் ரகுமான், கிருஷ்ணவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.