திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விமல் ராஜ். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு திக்குவாய் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் நண்பர்கள் யாருடனும் அவரால் சகஜமாகப் பேச முடியவில்லை. இது அவரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது பெற்றோரிடமும் விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,கடும் மன உளைச்சலில் இருந்த விமல்ராஜ் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விமல் ராஜ் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளது.
அதில், எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. ஐ லவ்யூ அம்மா, அப்பா, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். திக்குவாயால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.