புதுக்கோட்டை தபால் நிலையத்தில் இந்தியில் வழங்கப்பட்ட சலான்கள் தி.மு.க எம்.பி. எம்.எம்.அப்துல்லாவின் முயற்சியால் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் இருக்கும் அனைத்து சலான்களும் இந்தி மொழியில் இருப்பதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொலைத்தொடர்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சலான்கள் தமிழில் மாற்றப்பட்டுள்ளன. தி.மு.க எம்.பியின் முயற்சியின் விளைவாக உடனடியாக சலான்கள் தமிழுக்கு மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட எம்.எம்.அப்துல்லா எம்.பி, இந்தியில் வழங்கப்பட்ட முந்தைய படிவங்கள்; தற்போது தமிழில் வழங்கப்பட்ட படிவங்கள் ஆகியவற்றின் படங்களையும் இணைத்துள்ளார்.
இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக உடனடியாக எதிர்வினையாற்றி, மாற்றத்தை ஏற்படுத்திய எம்.பிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.