கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பினன்ர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சற்றே குறைப்போம் திட்டத்தின்படி, உப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை உணவில் குறைக்கும் விழிப்புணர்வு மற்றும் உபரி உணவுகளை வீணாக்கமால் உபயோகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்வுகளில் மீதமாகும் உபரி உணவை ஆதரவற்ற மக்களுக்கு கொண்டு செல்ல தன்னார்வ ஆர்வலர்களின் உதவியுடன் அரசு கைகோர்த்து செயல்படுத்தவுள்ளோம். அதற்கான வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் என்பது விஷம். அந்த எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கொள்முதல் செய்து பயோ-டீசல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை முயற்சிக்காக கோவையில் 550 டன் அளவில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளோம். ஏற்கனவே பிரேசில் நாட்டில் 500 டன் எண்ணெயை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க தனிப்பிரிவு 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாமில் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கிவிடும். பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது” எனத் தெரிவித்தார்.