ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தவறுதலாக குறிப்பிட்டார். உடனே சபாநாயகர் அப்பாவு, ‘அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்’ என்று கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
இதனை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை சபாநாயகர் அப்பாவு பேச அனுமதித்தார். அதைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “இந்தச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் எந்த இஸ்லாமியர்களுக்கும் எதிரான சட்டமில்லை” என்று பேசினார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, “இந்தச் சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டுவந்த சட்டமா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
உடனே நயினார் நாகேந்திரன் ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை குறிப்பிடுவதாக கூறினார். மேலும், CAA சட்டத்தை ஆதரித்துப் பேசிய நயினார் நாகேந்திரன் “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
உடனே சபாநாயகர் அப்பாவு, “அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நன்றி” என்று கூறினார். இதனால் பேரவையில் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன், “தவறாக குறிப்பிட்டுவிட்டேன், ஒன்றிய அரசின் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “உங்களை தனியா விட்டுட்டு வெளிநடப்பு பண்ணிட்டாங்க பாத்தீங்களா’ என்று கேட்டதும், பேரவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.