தஞ்சாவூர் மாவட்டம் பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சந்தோஷ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் மகளின் காதல் குறித்து அவரது தாய், உறவினர் ஜி.செல்வநாதன் என்பவருக்குத் தெரிவித்து சந்தோஷை அழைத்துக் கண்டிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வநாதன் சந்தோஷை அழைத்து இனி காதலிக்கக் கூடாது எனக் கண்டித்துள்ளார்.
இதனால் செல்வநாதன் மீது சந்தோஷ் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் தனது காதலுக்கு இடையூராக இருக்கும் இவரை கொலை செய்ய வேண்டும் என நண்பருடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்படி செல்வநாதனை மது அருந்தலாம் என அழைத்துள்ளார் சந்தோஷ். பின்னர் நேற்று இரவு விளார் புறவழிச்சாலையில் உள்ள திடலில் செல்வநாதன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் என மூன்று பேர் மது அருந்தியுள்ளனர். அதிகமாக மது குடித்ததில் செல்வநாதன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து, சந்தோஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வநாதனை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் செல்வநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் அமரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.