தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் நிலவும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக, அரசு நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகத் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்வதற்காகத் புதிய தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை ஆணையர் ஆல்பி ஜான் தனது ட்விட்டரில், "நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களால் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? ஒரு நிறுவனம், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் அல்லது எந்தவொரு குழுவும் 30க்கும் மேற்பட்ட (45 வயதுக்கு மேற்பட்ட) நபர்களை அணி திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். சென்னை மாநகராட்சி ஒரு தடுப்பூசி முகாமை அமைத்துத் தரும்" எனத் தெரிவித்துள்ளார்.