கோவையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினரை கண்டித்து தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணி மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ‘அ.தி.மு.க-வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டங்களை தி.மு.க நடத்தி வருகிறது. இக்கூட்டத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் காவல்துறையினர், கூட்டத்திற்கு முன்பாகவும், கூட்டம் நடைபெறும் சூழலிலும் தி.மு.க-வினரை கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க அரசுக்கு ஏவல்துறையாகச் செயல்படும் காவல்துறையை எதிர்த்தும், அடக்குமுறையைக் கையாளும் அரசை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் தி.மு.க -வினர் இன்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தி.மு.க-வின் பேரணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காலை முதலே கோவை மாவட்ட, மாநகர் எல்லைகளில் போலிஸார் அணிவகுத்து நின்று அப்பகுதி வழியே வரக்கூடிய தி.மு.க-வினரை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். அதையும் மீறி திட்டமிட்டபடி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட தி.மு.க -வின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கோவையில் தி.மு.க-வின் மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரின் அடக்குமுறையை எதிர்த்தும் ஊழல் குறித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.