சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ‘மனிதநேயம் உதித்த நாள்’ என்ற பெயரில் தி.மு.கழக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, புத்தாடை, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி செய்யும் 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் அரிசி மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி., பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை பரப்பும் வகையில் தி.மு.க கூட்டம் கூட்டுவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான ஒன்று. நோய்த்தொற்று காலத்தில் அ.தி.மு.க அரசு செய்யத் தவறிய அனைத்தையும் தி.மு.கவின் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்ததை அ.தி.மு.க அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவ முக்கிய காரணம் தமிழக அரசே. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயைப் பரப்பும் வகையில் செயற்பட்டதாக கூறி பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அ.தி.மு.க அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் மக்கள் செல்வாக்கை காட்டுவதற்காக காசு கொடுத்து மக்கள் கூட்டத்தைக் கூட்டுகின்றனர்.
இதனால் கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் அ.தி.மு.க அரசு கவனம் செலுத்தாமல் காவல்துறையை ஏவி மக்கள் நலனுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் தி.மு.கவினர் நடத்தும் நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.