தமிழகத்தை மீட்டெடுக்க எல்லோரும் நம்முடன் மூலமாக இதுவரை 20,00,000 புதிய உடன்பிறப்புகள் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், 'எல்லோரும் நம்முடன்' முன்னெடுப்பின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் தி.மு.கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்ததையடுத்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
தமிழகத்தை மீட்டெடுக்க எல்லோரும் நம்முடன் மூலமாக இதுவரை 20,00,000 புதிய உடன்பிறப்புகள் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி. 2021-ல் வளமான எதிர்காலத்தை அமைத்திட தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! நாம் இணைந்து தமிழகம் மீட்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கழகத் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் பேசியுள்ள விவரம் வருமாறு:
உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.
தமிழகத்தை தொழில்நுட்ப மாநிலமாக மாற்றியவர் தலைவர் கலைஞர். தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் இணையத்தின் பாய்ச்சலையும் உணர்ந்து இணையவழியில் கழக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
‘எல்லோரும் நம்முடன்’ என்ற முன்னெடுப்பை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கழகம் தொடங்கியது. இந்த முன்னெடுப்பின் மூலம் இதுவரை 20 இலட்சத்திற்கும் மேலானவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்ற பெருமைமிகு செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இளைஞர்களும் பெண்களும் பெருமளவில் கழகத்தில் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இயக்கத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். கோடிக் கரங்கள் ஒன்று சேரட்டும்! தமிழகம் மீட்போம்! காப்போம்!! வளம் சேர்ப்போம்!!!” எனத் தெரிவித்துள்ளார்.