தமிழ்நாடு

“டாஸ்மாக்கால் ஊரடங்கின் அத்தனை பலன்களையும் இழக்க நேரிடும்” - எச்சரிக்கும் மருத்துவர்கள் சங்கம்!

டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“டாஸ்மாக்கால் ஊரடங்கின் அத்தனை பலன்களையும் இழக்க நேரிடும்” - எச்சரிக்கும் மருத்துவர்கள் சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவுவதை தடுத்திட டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 42 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கை நடைமுறைப் படுத்தியதின் காரணமாகவும், தனிநபர் இடை வெளியை பராமரித்ததின் காணமாகவும் தான் தமிழகத்தில் கொரோனா பரவும் வேகத்தை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

இதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.

இந்நிலையில் “டாஸ்மாக்’’ மதுக்கடைகளை நேற்று முதல் தமிழக அரசு திறந்தது, கொரோனா தடுப்பில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கடுமையான கூட்டம் அலைமோதியதால், தனிநபர்களிடையேயான இடைவெளி பராமரிக்கப்படவில்லை.

இதனால்,கொரோனா தொற்று அதிகரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 42 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் பலன்கள் முற்றிலும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ,உடனடியாக கொரோனாவை கட்டுப் படுத்தும் வரை “டாஸ்மாக்’’ மதுக் கடைகளை மூட வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மதுவிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும்.

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட, அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும், உடனடியாக பாதுகாப்புக் கவச உடைகளை வழங்கிட வேண்டும்.

பாதுகாப்புக் கவச உடைகளை போதுமானதாகவும், தரமானதாகவும், சரியானதாகவும் வழங்கிட வேண்டும்.

“டாஸ்மாக்கால் ஊரடங்கின் அத்தனை பலன்களையும் இழக்க நேரிடும்” - எச்சரிக்கும் மருத்துவர்கள் சங்கம்!

சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட் 19 பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உணவு, குடி தண்ணீர், கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்து தரப்படவில்லை. அவற்றை உடனடியாக செய்து தர வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில், பணிக்குச் செல்லும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் உடனடியாக உணவு, குடி தண்ணீர், கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும்.

மார்ச் முதல் ஏப்ரல் வரை கூடுதலாக ஒரு மாதம் பணிபுரிந்த பயிற்சி மருத்துவர்களுக்கு, அந்த ஒரு மாதத்திற்கான ஊதியத்தையும், சிறப்பு ஊதியத்தையும் வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிற்சியை முடித்த, பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடியாக பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர்களின் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியதை கைவிட வேண்டும்.

மருத்துவர்களின் விடுதிக்கான மின்சாரத்தை துண்டித்திருப்பது கண்டனத்திற்குரியது. மின் இணைப்பை உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவு வசதியை உடனடியாக ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும்” என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories