சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனா உட்பட 60க்கும் மேலான நாடுகளில் இந்த கொரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் இதுவரை உலகளவில் பலி எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது.
தற்போது இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்களால் இந்தியர்களும் கொரோனா அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே இத்தாலியில் இருந்து வந்த 16 பேர் உட்பட இந்தியாவில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடாத வகையில், விமான நிலையங்கள் மற்றும் அனைத்து முக்கிய போக்குவரத்து நிலையங்களிலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இருந்து கடந்த 27ம் தேதி சென்னை வந்துள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அப்போதே உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 45 வயதான அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அந்த நபரின் உடல்நிலை சீரான நிலையிலேயே உள்ளது என்றும், அவர் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.