சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வித் திட்டத்தில் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் படிப்புகளை முடிக்காமல் இருக்கும் முன்னாள் மாணவர்கள் பயன்பெறுவார்கள் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வித் திட்டத்தில் 1980-81-ம் கல்வி ஆண்டு முதல் தற்போது வரை படித்தவர்களில் சில பாடங்கள் மட்டும் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, தோல்வியுற்ற மாணவர்களுக்காக நடப்பு கல்வி ஆண்டில் டிசம்பர், மே மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளன. எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.
அதன்படி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, மேற்கண்ட இணையதளம் மூலமாகவோ பல்கலை., அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அறியலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.