நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நீலகிரியில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன், தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 48 மணிநேரத்திற்கு மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அந்தமான் கடல் பகுதிகளுக்கும் அடுத்த 3 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் புவியரசன் கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியின் அவலாஞ்சியில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும், மேல் பவானி 23, தேவாலா 21, கோவை, வால்பாறை 20, தேனி பெரியாறு 18, நெல்லை பாபநாசம் 9, கன்னியாகுமரி தோவாலை 9 செ.மீ என மழை பதிவாகியிருப்பதாக தெரிவித்தார்.