இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பிடித்திருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்தார். இதனை பிசிசிஐ அமைப்பும் உறுதிப்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து விராட் கோலியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக சில ஊடகங்கள் கூறியிருந்தன. இந்த நிலையில், விராட் கோலியின் தாயார் குறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "என் அம்மாவின் உடல்நிலை தொடர்பாக பரவி வரும் தகவல்களில் உண்மையில்லை. அவர் நலமாகத்தான் இருக்கிறார். மக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்"என்று கூறியுள்ளார்.