2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றி கூட காணாத நிலையில், நேற்று மொஹாலியில் நடந்தது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் முறையாக வெற்றியை ருசித்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவருக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்.சி.பி. அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது. ஆட்டத்தில் ஜெயித்தும் அதனை கொண்டாட முடியாத வகையில் அந்த அணியின் கேப்டனான விராட் கோலிக்கு சோதனை உருவானது.
அதாவது, நேற்று நடைபெற்ற போட்டியின்போது, பந்து வீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ரூ. 12 லட்சத்தை அபராதமாக செலுத்துமாறு கோலிக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.