
SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2151 கோடி ரூபாய் கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் சந்துர்கர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜரானார். 2021-2022 நிதி ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கப்படவில்லை. இதனால் 43 லட்சத்து 94 ஆயிரத்து 906 மாணவர்களும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 817 ஆசிரியர்கள் மற்றும் 3271 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு விரைந்து நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதுவரை ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
அப்போது ஒன்றிய அரசு வழக்கறிஞர் பதிலளிக்க மேலும் 8 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து 8 வாரத்தில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க கோரி தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு மனுவை மூன்று வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






