
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் இன்று (நவ.02) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும், பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும், அப்போது தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும் மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரமாக மட்டுமே பார்கிறோம்.
அதை தான் பிகாரில் செய்தார்கள் இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். அதனால் தான் அதனை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க ஜனநாயக குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன் வைத்துள்ளோம்"என்று கூறினார். முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.






