
பல லட்சம் பேரில் வாக்குரிமையைப் பறித்த பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஆனால், அதிமுக இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்றுள்ளது. அதிமுகவின் இந்த செயலுக்கு திமுக IT Wing கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மூன்று வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை சட்டம் என பா.ஜ.க.வின் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்திற்க்கும் கை, கட்டி வாய் பொத்தி, முதுகு வளைந்து பழனிசாமியின் அதிமுக ஆதரித்த மக்கள் விரோத சட்டங்கள் ஏராளம்.. இதனால் நாடும் நாட்டு மக்களும் அடைந்த சீரழிவுகளும் ஏராளம்..
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

பீகாரில் உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் என ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்தது நாடறிந்ததே..
ஆனாலும், சுயநலத்தின் முழு உருவமாய் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமியின் கும்பல் இன்று தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோனாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் எஜமானர்களும் எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டுமென குறுக்கு வழியில் களமிறங்கியிருக்கின்றனர். ‘S.I.R’க்கு ஆதரவு அளித்துள்ளனர்.
பச்சோந்தியாக, பாஜகவின் பாதம்தாங்கிகளாக, சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போடும் இந்த அடிமைக் கூட்டத்திற்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் வரும் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றத்தைத்தான் பரிசாகத் தருவார்கள்!
இவர்களின் ‘S.I.R’ எனும் மோசடிக்கு எதிராக தி.மு.கழகம் போராடும்; தமிழர்களின் வாக்குரிமையை காக்கும்!" என்று கூறப்பட்டுள்ளது.






