உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமை நீதிபதி மீது தனது செருப்பு கழற்றி வீசி தாக்க முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், "இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் மீது உச்சநீதிமன்றத்தினுள் நடத்தப்பட்ட வெட்கக் கேடான தாக்குதல் என்பது நமது ஜனநாயகத்தில் நீதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். இது மிகக் கடுமையான கண்டனத்துக்குரிய செயல்.
அமைதியாகவும் கருணையோடும் பெருந்தன்மையோடும் மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியது நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது. எனினும், இத்தாக்குதலை நாம் சாதாரணமானதாகக் கருதலாகாது.
தாக்குதலை நடத்தியவர் அதற்குக் கூறிய காரணம், நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை - ஆதிக்க மனப்பான்மை எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரு சமூகமாக, நமது மக்களாட்சியின் நிறுவனங்களை மதிக்கும், பாதுகாக்கும் பண்பையும்; நடத்தையில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் போக்கையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!