கரூரில் நேற்று நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 39க்கும் மேற்பட்டோர் பலியான சோக நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களின் நெஞ்சங்களையும் பதற வைத்துள்ளது. 50–க்கும் மேற்பட்டோர் மயக்கமுற்றும், 40 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் கரூர் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனை முன்குவிந்து கதறி அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து ஏராளமான வதந்திகள் பரவிய நிலையில், இது குறித்து தமிழ்நாடு சட்டம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, "தவெக நிர்வாகிகள் முதலில் அளித்த மனுவில் மனுவில் இடம்பெற்ற லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி பாதுகாப்பான இடம் இல்லை என்பதாலும், உழவர் சந்தை பகுதியும் குறுகலான இடம் என்பதாலும் அந்த இடத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் தவெக நிர்வாகிகளின், அனுமதி மற்றும் ஒப்புதலுக்கு பிறகு வேலாயுதம் புறம் பகுதி வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் மனுவும் அளித்துள்ளனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் பேச நிர்ணயம் செய்திருந்த இடத்துக்கு சிறிது நேரம் முன்னரே பிரச்சாரம் செய்யும் படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறுத்து, கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் விஜயை பேச வைத்துள்ளனர்.
கரூரில் பார்க்க காலையில் இருந்தே சாப்பிடாமல் அதிகம் பேர் அங்கு காத்திருந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதி எதுவும் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அந்த கூட்டத்தில் இருந்த பலர் சோர்வடைந்திருந்துள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நாமக்கல்லிலேயே நடிகர் விஜயின் வருகைக்காக காத்திருந்த பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரூரில் விஜயின் பரப்புரைக்கு 20 பேருக்கு 1 போலீஸ் என்ற வீதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக அந்த பகுதியில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்"என்று கூறினார்.