தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு 2015 அறிவிப்பானை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியால் மதுரை தோப்பூரில் மருத்துவமனைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
ஆனால், மதுரைக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மதுரையில் மட்டும் இதுவரை எந்த கட்டுமான பணிகளும் தொடங்காத நிலையே நீடிக்கிறது. இதனிடையே கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.
எனினும் மாற்று ஏற்பாடாக தமிழ்நாட்டில் மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பிற அரசு மருத்துவ கல்லூரிகளில் அவர்களை படிக்க வைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்த நிலையில், முதற்கட்டமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள் ராமநாதபுரம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தரம் இவ்வளவுதானா என நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி. அசோக் குமார் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் எழுப்பிய கேள்வியில்," மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மாணவர்களும் படிப்பை முடித்து வெளியேறி உள்ளனர்.
ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது வரை கட்டடம் கட்டப்படவில்லை. இது என்ன மாதிரியான எய்ம்ஸ் மருத்துவமனை? எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தரம் இவ்வளவுதானா?"என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சுகாதார துறை அமைச்சர் நட்டா 2,3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.