தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, தென் மாநிலங்களை ஓரங்கட்ட நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் பெருமளவு பாதிக்கப்படும். எனவே இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 05) தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகள், அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக முதலமைச்சர் பேசினார். இதைத்தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த கூட்டத்துக்கு எதிர்க்கட்சி அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு தெரிவித்தது விட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக குறித்து அவதூறாக பேசினார். இந்த நிலையில் தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக, இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை. முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்!