ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவுவுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக வேறு வழியின்றி வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு நிறுத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்த சட்ட வரைவியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை 'மெட்ராஸ் பார் கவுன்சில்' என மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எங்கெல்லாம் தமிழ்நாடு என்றிருக்கிறதோ அதையெல்லாம் மாற்ற நினைக்கிறது ஒன்றிய அரசு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,"வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை 'மெட்ராஸ் பார் கவுன்சில்' என மாற்றத் துடிக்கின்றது ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு. பல்வேறு சட்டவரைவு திருத்தங்கள் செய்து, மாநில அங்கீகாரத்தை முற்றிலும் நீக்கி, அதிகாரத்தை தன்னிடமே குவிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசு. எங்கெல்லாம் தமிழ்நாடு என்றிருக்கிறதோ அதையெல்லாம் மாற்ற நினைக்கிறது ஒன்றிய அரசு.
சட்டவரைவு திருத்தங்கள் செய்வதன் மூலம் தமிழ், தமிழர்கள் என்றால் ஒன்றிய பாஜக அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது. தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மிக வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.