தமிழர்களின் பண்பாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களின் பண்பாட்டை விட உயர்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமாக இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டின் பண்பாடுகளுக்கு பல வகையில் எதிராக செயல்பட்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதற்கு, தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஏறுதழுவல் விளையாட்டிற்கு இடப்பட்ட இடைக்காலத் தடை இன்றியமையாத எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைந்த நிதி, மதச்சார்பின்மையை தாங்கிப்பிடிக்கும் தலைமைகளுக்கு மத சாயம் என தமிழ்நாட்டின் சமூகநீதி பாதையை மாற்ற ஒன்றிய பா.ஜ.க அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஏராளம்.
இந்நிலையில், தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளன்று, தேசிய அளவிலான யூஜிசி நெட் தேர்வு நடைபெறும் என அறிவித்து, தனது வஞ்சிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளது ஒன்றிய அரசு.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி.
அக்கடிதத்தில், “அண்மையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட யூஜிசி - நெட் தேர்வு அட்டவணையில், நெட் தேர்வு ஜனவரி 3 தொடங்கி, ஜனவரி 16 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் அடையாளத் திருநாளை கொண்டாட இடையூறாக அமைந்துள்ளது. குறிப்பாக மக்களின் பண்பாட்டு உரிமையை சிதைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எனவே, ஜனவரி 15, 16 நாட்களில் நடைபெறுவதாக அறிவித்த தேர்வுகளை நாள்மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.