ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பரப்புவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருகின்றன.
தங்கள் கட்சியைப் புகழும் வகையில் போலியான செய்திகளைப் பரப்புவதில் கைதேர்ந்தது பா.ஜ.க. ஆதரவைப் பெறுவதற்காக எந்த அளவிற்கும் இறங்கிச் செயல்படுவது பா.ஜ.க-வுக்கு வாடிக்கை.
மிஸ்டு-கால் மூலம் கட்சியில் ஆட்களைச் சேர்ப்பது, பெண்களின் எண் எனப் பகிர்ந்து அதன் மூலம் ஆதரவாளர்கள் கணக்கைக் கூட்டுவது போன்ற நடவடிக்கைகளில் அக்கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டரிலும் லட்சக்கணக்கான போலியான கணக்குகளை உருவாக்கி, அவற்றின் வழியாக பொய்ச் செய்திகளை உருவாக்கிப் பரப்புவதை மிகப்பெரும் அளவிலான வணிக உத்தியோடு செயல்படுத்தி வருகிறது பா.ஜ.க.
பிரபலமான நடிகைகளின் பெயரில் சமூக வலைதள பக்கங்களைத் துவங்கி, ஆபாசமான படங்களைப் பகிர்ந்து, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, அப்பக்கங்களின் பெயர்களை கட்சி சார்பானதாக மாற்றும் இழிவான போக்கிலும் பா.ஜ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ.க சொல்படி செயல்படும் அ.தி.மு.க-வும் இதுபோன்ற இழிவான வேலைகளில் இறங்கி வருகிறது. சினிமா நடிகையின் பெயரில் பக்கத்தை துவங்கி, அதிகமான பின்தொடர்பாளர்களை பெற்ற பிறகு ‘எடப்பாடி ஆர்மி’ என்பது போல பெயர் மாற்றி மக்களை ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தை ஆளும் கட்சி, இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தங்கள் கருத்துகளைப் பரப்ப எத்தகு இழிசெயலையும் செய்யத் தயங்காத அ.தி.மு.க-வா மக்களைக் காக்கப்போகிறது எனவும் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.